Wednesday, April 21, 2010

ஏப்ரல் 21- உலக வானவியல் தினம்

நாம், நமது நாட்டின் முக்கிய தினங்கள் என சுதந்திரதினம், குடியரசு தினம் ஆகியவற்றைக் கொண்டாடுகிறோம். அதுபோலவே ஐக்கியநாடுகள் சபை, யுனஸ்கோ, உலக சுகாதார‌ நிறுவனம், அறிவியலாளர்கள், அரசு அமைப்புகள், சில தன்னார்வ அமைப்புகள், சர்வதேச தினங்கள் பலவற்றை அறிவித்துள்ளன. அதன் முக்கியத்துவம் கருதி, மக்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்யவும், அதனால் பயனும், மகிழ்வும் பகிர்ந்தளிக்கவும், இந்த தினங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவைகளுள் முக்கியமானவை பிப்ரவரி 28 அறிவியல் தினம், மார்ச் 8 உல‌க மகளிர் தினம், மார்ச் 15 -உலக ஊனமுற்றோர் தினம், மார்ச் 21- உலக வனதினம், இன ஒழிப்புதினம், மார்ச் 22 - உலக நீர்தினம், மார்ச் 23 உலக வானிலை தினம் போன்றவை. அது போலவே ஏப்ரலிலும் ஏப்ரல் 1- உலக முட்டாள்கள் தினம், ஏப்ரல்-7 உலக சுகாதாரதினம், ஏப்ரல் 21- உலக வானியல் தினம், ஏப்ரல் 22- உலக புவிதினம், ஏப்ரல் - 23 உலக புத்தக தினமாகும்.

இதற்கான சிறப்பு நிகழ்வுகளை அரசு, கல்வி நிறுவனங்கள், தன்னார்வ இயக்கங்கள், தனி நபர்களும் நடத்துகின்றனர். ஏப்ரல் முதல் நாளில்தான் வணிகர்கள் அனைவரும் புதுக்கணக்கைத் துவங்குகின்றனர். ஏப்ரல் மாதம் என்பது வசந்தத்தின் துவக்கம். நம்ம‌ கோடை காலம் என்பதே வசந்தமாகும்.

ஏப்ரல் 21- உலக வானவியல் தினம்

நாம் அனைவரும், விரும்பியோ, விரும்பாமலோ, வானையும், வானில் வலம் வரும் சூரியன், சந்திரன், விண்மீன்கள், வான்மீன்கள், விண்கற்கள் எரிதல் போன்றவற்றைப் பார்க்கிறோம். சிலர் பார்த்து ரசிக்கின்றனர்; சிலர் அதன் வருகைகளைப் பதிவு செய்து, பண்ணங்கள், வடிவங்கள் சோதனை செய்து, மகிழ்கின்றனர். இதுதான் வானவியல் என்பது.

அனைவரும் பூமி வினாடிக்கு 30 கி.மீ. வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. அதுமட்டுமா- பிளாஸ்மா பொருளாலான நம் சூரிய விண்மீனும், தன் கோள்கள், வால்மீன்கள் என குடும்ப சமேதராய், தன் தாய்வீடான பால்வழி மண்டலத்தை சுமாராக வினாடிக்கு 250 கி.மீ. வேகத்தில் வட்டமடிக்கிறது. பால்வழி மண்டலமும் வினாடிக்கு 370 கி.மீ வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. நாம் அனைவரும் உட்கார்ந்து இருந்தாலும், வினாடிக்கு 280 கி.மீ வேகத்தில் ஆடாமல் அசையாமல் சொகுசு ரங்கராட்டினத்தில் நகர்ந்து கொண்டே இருக்கிறோம். இப்படிப்பட்ட ஆச்சரியமான இயற்கை வானியல் நிகழ்வுகளை சாதாரண‌ மக்களிடையே சொல்வதற்காக உருவான முக்கிய நாள்தான் உலக வானியல் தினம்.

வானியல் நிகழ்வுகளை, அதன் வியப்பை அடித்தட்டு பாமர மக்களிடம் பரப்பி, பகிர்ந்து, பங்குகொள்ள உருவாக்கப்பட்டதுதான் சர்வதேச வானியல் தினம். இது 1973-முதல் கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் 15ம் நாளுக்குப் பிறகு வரும், வளர்பிறையின் 4வது நிலவு நாளில் இந்த வானியல் தினம் அனுசரிக்கப்படுகிறது. இவ்வாண்டு 2010ல் ஏப்ரல் 21-தான் உலக/சர்வதேச வானியல் தினம். ஏப்ரல் மாதம் உலக வானியல் மாதமாக கொண்டாடப்படுகிறது.

வானியல் தினம்/வானியல் மாதத்தில் அனைவரும் அனுபவம் இன்றியும், கருவிகள் இன்றியும், வெறும் கண்ணால் பார்த்தே வானியல் பொருட்கள் நகர்வினைக் கண்டு களிக்கலாம். ஒளிமாசு குறைவான பொது இடங்களில், கிராமத்தின் வயல் வெளிகள், பூங்காக்களில் மக்களும், மாணவர்களும், குழந்தைகளும் ஒன்றுகூடி இதனைக் கொண்டாட வேண்டும். சூரியன், விண்மீன்கள் தினமும் உதிக்கும் நேரம் பார்க்கலாம், அது பற்றி பேசலாம். ஏப்ரல் 16-30 வரை இரவில் வடகிழக்கு வானில், சுமார் 50 பாகை உயரத்தில் லைரா என்ற விண்மீன் கூட்டத்தில் இருந்து விண்கற்கள் பொழிவு நிகழ உள்ளது. இது இரவு வானின் வண்ணமயமான வாணவேடிக்கை. இதனை ஏப்ரல் 16லிருந்தே காணலாம் என்றாலும் ஏப்ரல் 21ம் தேதிதான் சிறப்பாகப் பார்க்கலாம். அன்றைய தினம் இரவு 10 மணியிலிருந்து 22ம் நாள் விடிகாலை 3 மணி வரை மணிக்கு 20 என்ற எண்ணிக்கையில் கொட்டும்.

No comments: