Showing posts with label மூங்கில். Show all posts
Showing posts with label மூங்கில். Show all posts

Friday, June 24, 2011

மூங்கில் அறுவடையில் புதிய முடிவுகள்

தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை சமீப காலத்தில் வெளி யிட்ட அறிவிப்பின்படி, கிராமவாசிகள் காடுகளில் வளரும் மூங்கில் மரங்களை அறுவடை செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந் ததாக கருதப்படுகிறது. வனத்துறையின் கடுமையான எதிர்ப்பை சந்தித்துள்ள இத்தகைய அறிவிப்பின்படி மராட்டிய மாநிலத்தில் உள்ள மேந்தா லோக்கா கிராமத்தில் ஏப்ரல் 27ந் தேதி கிராம வாசிகள் சமுதாய உரிமையுடன் மூங்கில் சாகுபடியில் ஈடுபட்டனர்.

வரலாற்று ரீதியாக, மரமாக கருதப்பட்ட மூங்கில் சாகுபடியின் அறுவடை உரிமைகள் வனத்துறையிடம் இருந்தது. மிகவும் லாபகரமான மூங்கில் அறுவடை தொழில் இந்தியா வனச்சட்டம் 1927ம் ஆண்டின் சட்டப்படி முறையான அனுமதி பெறாத அறுவடைக்கு ஆறுமாத கடுங்காவல் தண்டனை அல்லது ரூ.500 வரை அபராதம் அல்லது அறுவடை சேதங்களை வைத்து இரண்டுமே கூட விதிக்கப்படலாம். இத்தகைய சட்டப்பிரிவு ‘மரம்’ என்ற சட்டரீதியான பொருளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.

தற்போதைய வன உரிமைகள் சட்டவிதி முறைகளின்படி மூங்கில் சிறிய அளவிலான வன உற்பத்தி பொருளாக முறைப்படுத்தப்பட்டு, அவற்றின் அறுவடை மற்றும் விற்பனை சமுதாய அளவில் மேற் கொள்ள வழிவகை செய்கிறது. வனத்துறை இத்தகைய வகைப்பாட்டை மறுப்பதுடன் மூங்கில் அறுவடை வாயிலாக மிகப்பெரிய சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிவிக்கிறது. மூங்கிலை மரமாக கருதினால் அவற்றை சம் பந்தப்பட்ட துறைகள் மரமாக அல்லது தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் இடுபொருளாக ஏலம் வாயிலாக விற்பனையை பேப்பர் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்த முடியும். தற்போது புல்லாக வகைப்படுத்தப்பட்டால் காடுகளில் உற்பத்தி செய்யப்படும் சிறிய அளவிலான பொருள் என்ற அடிப்படையில் வர்த்தக பயன்பாட்டிற்கு அறுவடை செய்யப்பட்டு மதிப்பு கூடிய வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்திக்கு பயன்படுத்த எளிதாக முடியும்.

நமது நாட்டில் மூங்கில் கொண்டு உருவாக்கப்படும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை வாயிலாக ஆண்டு தோறும் ரூ.2000 கோடி வரை வருமானம் கிடைக்கிறது. சுமார் 15 மில்லியன் மக்கள் மூங்கில் வணிகத்தை நம்பி உள்ளனர். இருப்பினும் காட்டில் பல தலைமுறை வசிக்கும் இம்மக்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட காடுகளில் இயற்கையாக உற்பத் தியாகும் மூங்கில்பொருட்களை பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்டது.

சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா மூங்கில் மரபணு வளங்களை கொண்டதாக உள்ளது. இரண்டுநாடுகளின் மொத்த உற்பத்தி உலகின் 50 சதவீத அளவை காட்டிலும் அதிகம். தற்போது 9.57 மில்லியன் ஹெக்டேர் நிலங்களில் பரந்து விரிந்த வடகிழக்கு மாநிலங்களில் சாகுபடி செய்யப்படும் மூங்கில் மரங்கள் நமது நாட்டின் வனப்பரப்பில் 12.8 சதவீதம் ஆகும். பேப்பர் தொழிற்சாலை மட்டும் ஆண்டிற்கு மொத்தம் 4.6 மில்லியன் டன்கள் உற்பத்தியில் 2 மில்லியன் டன் உற்பத்தியை பயன்படுத்துகிறது. தேசிய மூங்கில் பயன்பாடு இயக்கம் சார்பில் மூங்கிலை பிற மரங்களுக்கு மாற்றாக பயன்படுத்த முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போதைய மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்கள் மூங்கிலை புல்லாகவே கருதும் நிலையில், மத்திய வேளாண் அமைச்சகம் மூங்கிலை தோட்டபயிராக அறிவித்து அவற்றின் சாகுபடி, பயன்பாடு மற்றும் போக்குவரத்தை தடையில்லாமல் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மூங்கிலை அறுவடைக்கு விடும் முயற்சிகள் வன சுற்றுச்சூழலில் அதிகளவு பாதிப்புகள் ஏற்படுத்தும் என்றும் இதனால் பல வன விலங்குகளின் இருப்பிடச்சூழல் பாதிக்கப்படும் என்றும் மூங்கில் பூக்களை உணவாக கொள்ளும் பல வன விலங்குகள் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மூங்கிலை வனத்தில் உள்ள சிறிய அளவிலான வன உற்பத்தி பொருளாக அறிவிக்கப்பட்ட நிலை காரணமாக பல பழங்குடியினரின் வாழ்வுரிமைகள் மற்றும் பொருளாதார நலன்கள் பாதுகாக்கப்படும். எனவே வன உரிமைகள் பாதுகாப்பு சட்டம் காரணமாக அதிகளவு பழங்குடியினர், வன விவசாயிகளின் ஓட்டுகளை பெற அரசியல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் தற்போதைய சட்டம் வனவிலங்கு பூங்காக்கள், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கு 4 ஹெக்டேர் நிலம் வரை வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய புதிய வனவிலங்குச் சட்டம் காடுகளை தனியாருக்கு திறந்து விட்டு விட்டதாகவும், காடுகளை பாதுகாக்க சட்ட பாதுகாப்பு இல்லை என்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கருதும் நிலையே காணப்படுகிறது.

நன்றி:முனைவர் தி.ராஜ்பிரவீன் உதவிப்பேராசிரியர் வேளாண்மை விரிவாக்கத்துறை