Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Wednesday, February 9, 2011

விளைச்சலைப் பெருக்க `ஃபெர்டிகேஷன்’ முறை

“மானியங்களையும் உதவித் திட்டங்களையும் விட நிலத்திலிருந்து கிடைக்கும் உத்தரவாதமான வருமானமே ஒரு விவசாயியை வேளாண்துறையில் தொடர்ந்து நீடிக்க வைக்க முடியும்; இளைஞர்களிடம் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்த முடியும். ஒரு விஞ்ஞானமோ, தொழில்நுட்பமோ விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தைத் தருமானால் அந்த முறையைப் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் தயாரா கவே இருப்பார்கள்” என்கிறார் திரு வெண்ணைநல்லூரில் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநராக இருக்கும் டேவிட் ராஜா பியூலா.

விழுப்புரம் மாவட்டம் ஓகையூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி கோகிலா குமார் தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்திலிருந்து 26,000 கிலோகிராம் மஞ்சளை அறுவடை செய்து ஒன்பதே மாதங்களில் 11 லட்ச ரூபாய் வருமானத்தை ஈட்ட முடிந் தது என்றால், அவர் `ஃபெர்டிகேஷன்’ முறையை மேற்கொண்டதுதான் காரணம். இதைப் பார்த்ததும் அப்பகுதியி லுள்ள ஏராளமான விவசாயிகள் அதே முறையைப் பயன்படுத்தி மஞ்சள் சாகுபடியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

தோட்டக்கலை அதிகாரிகள்தான் திருமதி கோகிலாவுக்கு இந்த புதிய முறையை அறிமுகப்படுத்தினர். உரங்களையும் தண்ணீரையும் கலந்து சொட்டுநீர்ப் பாசனத்தை மேற்கொள்வதுதான் `ஃபெர்டிகேஷன்’ முறை. இந்தத் தொழில் நுட்பத்தை செயல்பாட்டிற்குக் கொணர சுமார் ஒரு லட்ச ரூபாய் முதலீடு தேவைப் படும். இதில் 50000 ரூபாயை அரசு மானியமாகப் பெற முடியும். “ஃபெர்டிகேஷன் முறையின் மூலம் விளைச்சலைப் பெருக்க முடியும், களைகளைக் குறைக்க முடியும் என்பதைத் தற்போது நான் நேரடியாகத் தெரிந்து கொண்டு விட்டேன்” என்கிறார் கோகிலா.

“ஃபெர்டிகேஷன் முறையை நிறுவிக்கொள்ள வங்கிக் கடன்களுக்கு விண்ணப்பிப்பதைவிட, சொந்தப் பணத்தை முதலீடு செய்வதே சிறந்தது. காரணம், வங்கிக் கடன் கிடைப்பதற்கு ஆகும் ஒரு வருட காலத்திற்குள் விவசாயிகளின் ஆர்வமே தணிந்துபோய் விடுகிறது.
கருணை, சேனை, மரவள்ளிக் கிழங்குகள், மஞ்சள் ஆகியவற்றைப் பயி ரிடும் பல ஓகையூர் விவசா யிகள் இந்தப் பணத்தை முதலீடு செய்யுமளவுக்கு வசதியாகவே உள்ளனர். அதே சமயம், மூன்று கிலோ மீட்டர் தள்ளியுள்ள பக்கத்து கிராமங்களில் உள்ள விவசாயிகள் கடன்களில் மூழ்கியுள்ளனர். அவர்களிடமும் இந்த ஃபெர்டிகேஷன் முறையைக் கொண்டு செல்ல தோட்டக்கலைத் துறை முயற்சி செய்து வருகிறது.... புதிய பாசன முறையை நேரடியாகப் பார்த்து திருப்தியடைந்தால்தான் எந்தவொரு விவசாயியும் அதை ஏற்கவேண்டும் என்ற முடிவுக்கு வருவார். மாறாக, இனிமையாகப் பேசி மட்டும் அவரை ஏற்கவைத்துவிட முடியாது” என்கிறார் டேவிட் பியூலா.

“பல தலைமுறைகளாக நாங்கள் விவசாயம் செய்து வந்தாலும் மிகக் குறைந்த நிலத்திலிருந்து அதிகமான வருமானத்தை நாங்கள் ஈட்டுவது இதுவே முதல் முறை. இன்று விவசாயம் பல்வேறு காரணங்களால் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. வேளாண் துறை ஒரு தங்கச் சுரங்கம் என்பதை உணர்ந்து கொள்ள நமது ஆட்சியாளர்கள் தவறி விட்டதால்தான், பன்னாட்டுக் கம்பெனிகள் உள்ளே நுழைந்து நம் விவசாயிகள்பால் அக்கறை உள்ளவர்கள்போல் நடித்து இந்தியச் சந்தையைக் கைப்பற்ற முடிந்துள்ளது” என்று விவசாயத்தைப் பற்றிய தெளிவான புரிதலுடன் பேசுகிறார் கோகிலா.

ஓகையூர் உதாரணத்தை நாட்டிலுள்ள மற்ற பயிர்களுக்கும் விரிவுபடுத்த முடியுமானால் நமது விவசாயிகள் மவுனமாகத் துன்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது என்பது கோகிலாவின் கருத்து. மேலும் இந்தப் புதிய வகைப் பாசன முறை பற்றித் தெரிந்து கொள்ள அவரையோ (செல் : 9047618171) டேவிட் பியூலாவையோ (செல் : 9486285704) தொடர்பு கொள்ளலாம்.

ஆதாரம் : தி இந்து நாளிதழில் திரு எம்.ஜெ. பிரபு எழுதிய கட்டுரை.

Saturday, July 10, 2010

உணவை பகுத்து ஆராயும் காந்தவியல்

ஒவ்வொரு காந்தமும் வடக்கு தெற்கு என இரண்டு துருவங்களைக் கொண்டது. ஓரினத் துருவங்கள் அருகருகே வரும்போது அவற்றிற்கிடையே விலக்குவிசை தோன்றும். எதிரினத் துருவங்கள் அருகருகே வைக்கப்படும்போது அவற்றிற்கிடையே கவர்ச்சி விசை தோன்றும். காந்தங்களின் இந்த அடிப்படைப் பண்பு காந்த மிதவை ரயிலை இயக்க பயன்படுகிறது.

காந்த மிதவை இரயில் வழக்கமான இரும்புத் தண்டவாளங்களில் ஓடும் இரயில் அல்ல. guideway எனப்படும் சிறப்புப்பாதைகள் வழியாக இந்த மிதவை இரயில்கள் ஓடுகின்றன. guideway யின் வழியாகச் செல்லும் வலிமையான காந்தச்சுருள் இரயில் பெட்டியின் அடிப்பகுதியுடன் ஒரு விலக்கு விசையை தோற்றுவிப்பதால் guideway யில் இருந்து 1 முதல் 10 செமீ தொலைவிற்கு இரயில் வண்டி உயர்த்தப்படுகிறது. Guideway ன் பக்கச்சுவர்களுக்கு கொடுக்கப்படும் மின்னோட்டம் காரணமாக மற்றொரு காந்தப்புலம் தோற்றுவிக்கப்படுகிறது. மின்னோட்டத்தின் திசை மாறும்போதெல்லாம் காந்தவிசையின் துருவங்களும் மாறிக்கொண்டிருக்கும். இதன் விளைவாக ஒரு இழுத்தல் - தள்ளுதல் விசை தோற்றுவிக்கப்படுகிறது.

இரயில் வண்டியின் முன்புறம் இழுத்தல் விசை தோற்றுவிக்கப்படும் அதே வேளையில் பின்புறம் தள்ளுதல் விசை தோற்றுவிக்கப்படும். எனவே, இரயில் வண்டி காற்றுமெத்தையின்மீது சுகமான பயணத்தை மேற்கொள்ளுகிறது. உராய்வு இல்லை என்பதாலும், இரயில் வண்டியின் உடலமைப்பு காற்றை கிழித்துச்செல்லும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதாலும் வண்டியின் வேகம் அதிகமாக இருக்கும். அதாவது ஒரு மிதவை இரயிலின் வேகம் போயிங்-777 விமானத்தின் வேகத்தை விட அதிகமாக இருக்கும்.

மிதவை இரயிலில் பயன்படும் காந்தவிசையின் கவர்ச்சி-விலக்கல் தத்துவம் உணவுப்பொருட்களின் இயற்பியல், வேதியியல் பண்புகளை ஆராயப் பயன்படுகிறது என்பது அண்மைக்கால கண்டுபிடிப்பாகும். காந்த மிதவை மண்டலத்தில் வைக்கப்படும் உணவு, நீர் மற்றும் பானங்கள் இவற்றின் தன்மைகள் எளிதில் அளவிடப்படுகின்றன. உணவுசார்ந்த தொழில்நுட்பங்களில் ஒரு பொருளின் அடர்த்தி முக்கியமான பங்கு வகிக்கின்றது.

ஒரு உணவுப்பொருளில் அடங்கியுள்ள வேதிப்பண்புகளை அறிந்துகொள்ள அதன் அடர்த்தி பற்றிய அறிவு அவசியம். ஒரு மென்பானத்தில் அடங்கியுள்ள சர்க்கரையின் அளவு, ஒயினில் அடங்கியுள்ள ஆல்கஹாலின் அளவு, பாசன நீரில் அடங்கியுள்ள உப்பின் அளவு, பாலில் அடங்கியுள்ள கொழுப்பின் அளவு இவையெல்லாம் அடர்த்தியை சார்ந்தவை. இதுவரை உபயோகத்தில் இருந்துவந்த ஆய்வுக்கருவிகள் அனைத்தும் விலை கூடியவை, எளிதில் கையாள முடியாதவை, மேலும் சிக்கலானவை.

காந்த மிதவை மண்டலத்தில் அளவீடுகளை செய்வதற்கென ஒரு உணர்கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு முனைகளிலும் காந்தங்கள் பொருத்தப்பட்ட இந்த உணர்கருவியில் ஒரு திரவம் நிரப்பப்பட்டிருக்கும். சோதித்து அறிய வேண்டிய உணவுப்பொருட்களின் மாதிரிகள் இந்த திரவத்திற்குள் கடந்துசெல்லும்போது உணவுப்பொருட்களின் அடர்த்தியை எளிதில் அளவிட்டுக் கொள்ளலாம்.

Courtesy: Mr.Mu.Gurumoorthy