Tuesday, February 8, 2011

மரங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடு

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஜப்பானில் உள்ள காமகுரா கோவிலில் 800 வயதான பெரு மைக்குரிய கிங்கோ மரம் ஒரு பனிப்புயலின் காரணமாக கீழே விழுந்துவிட்டது. அதன் மீது ஒயினை ஊற்றி, பிறகு உப்பு சேர்த்து அதற்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன ! 1219 பிப்ரவரி 12 அன்று காமகுரா சேய்வா கெஞ்சி பேரரசு வீழ்ந்ததற்கு சாட்சியாக இருந்த மரம் இதுதான்.

மரங்கள் வரலாற்றை மட்டும் சொல்வதில்லை. பழமையின் பெருமையைப் பறைசாற்றும் நினைவு களையும் தரவல்லவை. கவுதம புத்தர் அமர்ந்த போதி மரம் ஓர் உதாரணம். கி.மு. 286-ல் இம்மரத் தின் ஒரு கிளை இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுராதபுரத்தில் நடப்பட்டது. உலகில் மனிதரால் முதன்முதலில் நடப்பட்ட மரம் இதுவாக இருக்கக்கூடும். “எல்லா உயிரினங்களுக்கும் உணவு, தங்குமிடம், பாதுகாப்பு எல்லாம் தரும் அற்புதமான ஓர் உயிருள்ள பொருளே மரம். கோடாரியைக் கொண்டு அதை வெட்டிச் சாய்க்கும் மனிதர்களுக்கும் அது நிழலையே தருகிறது” என்றார் புத்தர். எவ்வளவு உண்மை !

கர்நாடகாவில் உள்ள 81 வயதான சாலமராதா திம்மக்கா ஓர் உண்மையான உணர்வுரீதியான பௌத்தர். அவரும் அவரது கணவரும் தங்களுக் குக் குழந்தை பிறக்காது என்பதைத் தெரிந்து கொண்டவுடன், மரங்களை நட்டு அவைகளைத் தங்களது குழந்தைகளைப் போல் வளர்க்க முடிவு செய்து அதை அமல்படுத்தி வருகின்றனர்.

மரங்களில் மிகப் பழமையானவை உண்டு. போதி மரம் 2300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனில் கலிபோர்னியாவில் உள்ள செக்கோயியா மரங்களும் அந்தக் காலத்தைச் சேர்ந் தவைதான். 275 அடி உயரம், 6000 டன் எடை, 52500 கன அடி கொண்ட மிகப் பெரிய மரங்கள் அவை. கடல் மட்டத்தைவிட 11000 அடி உயரத்தில் உள்ள மெத்தூசிலா என்றழைக்கப்படும் ஊசியிலை மரம் 48,838 ஆண்டு கள் பழமையானது என்று மதிப்பிடப்படுகிறது. உலகின் மிக வயதான மரம் நார்வே-ஸ்வீடன் எல் லையில் உள்ள டலாமாவில் இருக்கிறது. அது எப்போதுமே பசுமையாக இருக்கும் ஒருவகை ஊசியிலை மரம். அதனுடைய அடிமரம் 600 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடியது என்று மதிப்பிடும் விஞ்ஞானிகள், அது குளோனிங் (செல்களைக் கொண்டு செயற்கையாக உருவாக்கிக்கொள்ளும்) செய்துகொள்ளும் தன்மையுடையது என்கின்றனர்.

இந்த குளோனிங் செய்துகொள்ளும் தன்மை தான் தாவரங்களையும் மரங்களையும் நம்மிலிருந்தும் பிற விலங்குகளிலிருந்தும் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. இந்தத் தன்மையின் காரணமாகத்தான் போதி மரத்தின் கிளையைக் கொண்டு போய் அனுராதபுரத்தில் நட்டு மற்றொரு மரம் வளர்க்க முடிந்தது. இதனால்தான் டாக்டர் ஜெயந்த் நர்லிகரால், ஐஸக் நியூட்டன் புவி ஈர்ப்புவிசையைக் கண்டுபிடிக்க உதவிய ஆப்பிள் மரத்தின் ஒரு கிளையைக் கொண்டுவந்து புனேயில் நட முடிந்தது.

மரங்களைப் போல் குளோனிங் செய்து கொண்டு ஏன் நம்மால் நெடுங்காலம் வாழ முடிவ தில்லை? நம்முடைய செல்கள் பிளவுண்டு கொண்டே போக முடியாது. 40 சுற்றுகளைத் தாண்டி அவைகளால் மறுஉற்பத்தி செய்துகொள்ள முடியாது. நமது குரோமோசோம்களின் மரபணுக் கள் மறுபிரதி எடுத்துக் கொள்ளும் தன்மையைப் புரிந்துகொண்டால் இந்தப் புதிருக்கான விடை கிடைக்கிறது.

குரோமோசோம் பிளவுண்டு தன்னையே மறு பிரதி எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு முறையும் முனையில் சிறிதளவு இழப்பு ஏற்படுகிறது. சில தடவைகள் மறுபிரதி எடுத்தபிறகு அதற்கு ஒரு முடிவு ஏற்பட்டுவிடுகிறது. நமக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் ஆயுள் முடிகிறதெனில் மொத்த உடலுக்கும் சேர்த்துதான் முடிவு ஏற்படுகிறது. ஆனால் தாவரங்களுக்கு ஆரம்பகட்ட உடல் அமைப்பே இருக்கிறது. அவை வேர்கள், தண்டுகள், கிளைகள், இலைகள் எனத் தனித்தனி பகுதிகளாக வளர்கின்றன. இலைகள் வளர்ந்து உதிர்ந் தபின்னரும் தாவரத்தின் மற்ற பகுதிகள் இறந்து விடுவதில்லை. ஒரு பகுதியின் செல்கள் ஒட்டு மொத்த உயிரியாக மறுஉற்பத்தி செய்துகொள்ள முடியும். ஒரு மரத்தின் கிளையை அல்லது குச்சியை எடுத்து வேறொரு இடத்தில் நட்டு மற்றொரு மரத்தை வளர்க்க முடியும். அல்லது வேறொரு கிளையுடன் ஒட்டவைத்து புதிய வகை மரத்தையே கூட உருவாக்க முடியும். ஒரு பகுதியின் செல்கள் இறப்பு ஒட்டுமொத்த உயிரியின் இறப்பாக முடிந்துவிடுவ தில்லை.

(ஆதாரம் : தி இந்து நாளிதழில் திரு டி. பாலசுப்பிரமணியன் எழுதிய கட்டுரை)

இந்த அளவு தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் வல்லமை படைத்த மரங்களைக் கூட வெட்டி அழிப்பதில் மனிதன் வெற்றி பெற்றுவிடுகிறானே? மரங்களை வெட்டவேண்டிய கட்டாயம் நேரிடும் போது அவற்றின் கிளைகளை வேறொரு இடத்தில் நட்டு அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச அக்கறை கூட நம்மிடம் இல்லை யென் றால் கடைசியில் அவதிப்படப்போவதும் நாம்தானே?

நன்றி: தீக்கதிர்

No comments: