Saturday, August 14, 2010

இரவு வானின்... வண்ணப்... பட்டாசு..!.

ஆகஸ்ட் 12 இரவு வானை 10 மணிக்கு மேல் வானம் பட்டாசு கொளுத்தி, நம்மையெல்லாம் மகிழ் வித்தது. அந்த வண்ணப் பட்டாசின் பெயர்தான் பெர்சியாய்டு விண்கற்கள் பொழிவு. இதனை நாம் அனைவரும் வெறும் கண்ணாலேயே , எந்த வித கருவிகளும் இன்றி பார்க்கலாம்.இது நீண்ட காலமாக, கடந்த 2000 ஆண்டுகளாய் மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இரவு வானில் வடகிழக்கே பெர்சியஸ் விண்மீன் தொகுதி தெரியும். பூமி தன் சுற்றுப் பாதையில் செல்லும்போது ஸ்விப்ட் டர்ட்டில் என்ற வால்மீன் விட்டுச் சென்ற தூசி வழியாக கடக்கும். ஒவ்வொரு ஆகஸ்ட் மாதமும் நம் பூமி வானில் வடகிழக்கில் தெரியும் பெர்சியஸ் விண்மீன் தொகுதி வழியே வலம் வரும். இது இந்த காலகட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல்தான், பெர்சியஸ் விண்மீன் தொகுதி வானில் தெரியும். இதிலிருந்து இந்த விண்கற்கள் பொழிவு தெரிவதால் இது பெர்சியாய்டு விண்கற்கள் பொழிவு என்றே அழைக்கப்படுகிறது. அந்த விண்மீன் தொகுதியிலிருந்து அனைத்து திசைகளுக்கும். விண்கற்கள் தீபாவளி மத்தாப்பூ போல, பல வண்ணங்களில் எரிந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் பூமியை நோக்கி விழும். ஆனால் அவை பூமியைத் தொடுவதற்குள் எரிந்து சாம்பலாகிவிடும்.

ஸ்விப்ட் டர்ட்டில் என்ற வால்மீன் பற்றிய பதிவு கி.பி. 68 களிலேயே காணப்பட்டதாக பழங்கால பதிவுகள் சொல்கின்றன. ஆனால் இதனை முதலில் லெவிஸ் ஸ்விப்ட் மற்றும் டர்ட்டில் என்ற, இரு அமெரிக்கர்களே கண்டுபிடித்தனர்.எனவே இந்த வால்மீன் அந்த இருவர் பெயரிலேயே ஸ்விப்ட் டர்ட்டில் என அழைக்கப்படுகிறது. ஸ்விப்ட் டர்ட்டில் என்ற வால்மீன், 130 ஆண்டுகாலம் தன் சுற்றுப் பாதையில் சுற்றியபோது, விட்டுப் போன தூசுகள்தான் இவை. அவை பெர்சியஸ் விண்மீன் பக்கம் உலவுவதால் அதனை பெர்சியாய்டு மேகம் என்றே கூறுகின்றனர். அதே ஸ்விப்ட் டர்ட்டில் மீண்டும், 1862ல் வந்தபோது, இன்னும் கொஞ்சம் தூசை விட்டுச் சென்றது. அதன் பின் 1992 ல் வந்தது, இனி 2122ல் அடுத்து சுற்று நம் பூமியை பார்வை இட வரும்.

வானத்தில் தெரியக்கூடிய விண்கற்கள் பொழிவில் பெர்சியாய்டு பொழிவுதான், ரொம்பவும் அழகாகவும், கண்ணை கவரும் வகையில் அற்புதமாகவும், விண்கற்கள் எரிந்து விழும் எண்ணிக்கையிலும் அதிகமாகவும் இருக்கும். இதன் மூலம் உண்டாகும், எரிநட்சத்திரம் அல்லது எரிகற்கள் என்னும் விண்கற்கள் கூட்டம் கூட்டமாய் எரிந்து விழுவதைத்தான், வானியலாளர் விண்கற்கள் பொழிவு என குறிப்பிடுகின்றனர்.

பெர்சியாய்டு விண்மீன் பகுதியின் விண்கற்கள் பொழிவு,பொதுவாக ஜூலை 23லிருந்து ஆகஸ்ட்24 வரை மாதம் முழுவதும் நடக்கும். ஆனாலும் ஆகஸ்ட் 11 -13 தேதிகளில்தான் மிகவும் அதிகமாய், கூட்டமாக விண்கற்கள் எரிந்து விழுவதைப் பார்க்க முடியும். இப்போது, இவை மணிக்கு 80-100 என்ற அளவில், ஆகஸ்ட் 12ம் நாள் இரவு 10 மணிக்கு மேல் தொடங்கி, 13ம் தேதி விடிகாலை 4 மணி வரை விடிய விடிய மத்தாப்பூ கோலாகலம் நடக்கும். நாம் பார்த்து,பரவசப்பட்டு ரசிக்கலாம். அதுவும் விடிகாலை நேரத்தில்தான் 2-3 மணியளவில் ரொம்ப அற்புதமாய் இருக்கும். 1-14 தேதிகளுக்குப் பின்பும் கூட இதனைப் பார்க்கலாம். ஆனால் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.

கடந்த 20 ஆண்டுகளில் பலமுறை, இரவு வானையே வண்ணக் கோலத்தால் நிறைத்தது போல, மணிக்கு 150-400 என்ற எண்ணிக்கையில் விண் கற்கள் எரிந்து வெடித்துச் சிதறின. ஜேரிமி வாபால்லியன் (துநசநஅநை ஏயரயெடைடடிn) மற்றும், மிகைல் மாச்லொவ் என்ற இரு வானவியலாளர்களும் இந்த ஆண்டு தெரியும். விண்கற்களின் எண்ணிக்கையும் அதிகமாக மணிக்கு 200 என்ற அளவில் இருக்கும் என கணித்துள்ளனர். அதேபோல இந்த ஆண்டு தெரியும் எரியும் விண்கற்கள் வெள்ளியைவிட பிரகாசமாய் இருக்கும் என நாசா கணித்துள்ளது. ஆனால் இந்த விண்கல்லின் அளவு மண்துகள் அளவுதானாம்.

மூன்றாண்டுகளுக்கு முன்புதான், நிலா இல்லாத இரவில், ஆகஸ்ட் மாத விண்கற்கள் பொழிவை நாம் நன்றாகப் பார்த்து ரசித்து அனுபவித்து மகிழ்ந்தோம். இதே போல அக்டோபர் 21ல் நிகழ உள்ள ஓரியான் விண்கல் பொழிவும் அழகாக இருக்கும். ஆனால் இம்முறை அது நிகழப் போவது முழுநிலா நாளில். நாம் எப்படி அதனை பார்த்து மகிழ. அடுத்த ஆண்டு பார்ப்போம்..!

- சோ.மோகனா

1 comment:

VELU.G said...

நல்ல பகிர்வு