Showing posts with label நகரமயமாக்கல். Show all posts
Showing posts with label நகரமயமாக்கல். Show all posts

Saturday, November 12, 2011

இந்திய நகரங்களில் தீவிரமடையும் சுவாசப் பிரச்சனை

இந்திய நகரங்களில் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, காற்று மாசு கடுமையாகி வருகிறது. இதனால் மக்களுக்கு சுவாசப் பிரச்சனையும் தீவிரமடைந்துள்ளது.

இந்திய நகரங்களில் வாழும் நடுத்தர வர்க்கத்து மக்கள், தங்கள் வீடுகளில் இரு சக்கர மோட்டார் வாகனங்கள் இருக்க வேண்டுமென அதிக அளவில் வாங்கி வருவதால் வாகனப் புகையால் காற்றுப் பகுதி மாசடைந்து, மக்களுக்கு பெரும் தீங்கு விளைவிப்பதாக உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலும், சீனாவில் உள்ள நகரங்களிலும் கடல்போல, மோட்டார் வாகனங்கள் பெருகி உள்ளன. தீவிரமான மற்றும் நீண்ட கால சுவாசப் பிரச்சனைகள், நுரையீரல் புற்றுநோய் ஆகியவை காற்று மாசடைவதால் ஏற்படுகின்றன என ஐக்கிய நாடுகள் சபையின் இந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

எஸ்யுவி எனப்படும் இலகுரக வாகனங்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் போன்றவை அளவுக்கு அதிகமாக பெருகி, சாலைகளில் ஓடுவதால் மக்களின் ஆரோக்கியத்தில் விபரீத விளைவை ஏற்படுத்தியுள்ளது.

சுவாச நோய்கள் மற்றும் புற்றுநோய் காரணமாக 13 லட்சத்து 40 ஆயிரம் முன்கூட்டிய மரண நிகழ்வுகள் 2008ம் ஆண்டில் நிகழ்ந்துள்ளன. வாகனப் புகையால் காற்று மாசடைந்திருப்பதன் காரணமாகவே இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனா, இந்தியா மற்றும் இதர வளரும் நாடுகளில் உள்ள தொழில் நகரங்கள் பெருக்கத்தால் நுரையீரல் நோய்கள் ஏற்படுகின்றன. 2008ம் ஆண்டில் 10 லட்சத்து 90 ஆயிரம் முன்கூட்டிய மரணங்களை தவிர்த்திருக்க முடியும் என்று இந்த அமைப்பின் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாக இயக்குநர் மரியா நெய்ர்ஸ் தெரிவித்தார்.

91 நாடுகளில் உள்ள ஆயிரம் நகரங்களில் காற்றின் தன்மைக்குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் மாசடைந்த காற்றால் ஏற்படும் அபாயகரமான நோய்கள் விவரம் பற்றி தெரியவந்தது. பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக சீனா மற்றும் இந்தியா நகரங்கள் உள்ளன. இந்த நாடுகளின் நகரங்களில் அதிகபட்ச தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று நெய்ர்ஸ் தெரிவித்தார். இந்த நாடுகளில் நீண்டகால சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. போர்க்கால அடிப்படையில் இந்த நாடுகளில் காற்றின் தூய்மையை சூழலை மேம்படுத்தத் தவறினால் இதயம் மற்றும் நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா மற்றும் தீவிர சுவாசத் தொற்றுகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார். தொழில் நகரங்களில் தொழிற்சாலைப் புகை, வாகனப்புகைகள் கடுமையாக இந்திய நகரங்களின் காற்றை மாசுபடுத்தி வருகின்றன. 10 மைக்ரோ மீட்டர் அல்ல, அதற்கு சற்றுக் குறைவான மாசுத் துகள்கள் நுரையீரலில் கலந்து ரத்த ஓட்டத்தில் கலக்கும். இதன் காரணமாக இதய நோய் மற்றும் இதர நோய்கள் ஏற்படும் என்றும் நெய்ர்ஸ் எச்சரித்தார்.

உலக சுகாதார அமைப்பின் காற்று வரையறையை பல நகரங்கள் மீறியுள்ளன.கன அடி மீட்டருக்கு 300 மைக்ரோ கிராம் என்ற அளவில் இந்தியா, சீனா, தொழில் நகரங்களில் காற்று மாசுத் துகள்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கனமீட்டரில் 20 மைக்ரோ கிராம் அளவே காற்று மாசுத் துகள்கள் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியிருந்தது.

Friday, August 19, 2011

பேக் செய்யப்பட்ட உணவு பண்டங்களால் சிறுநீரகத்ததுக்கு ஆபத்து

பேக் செய்யப்பட்ட உணவு பண்டங்களால், சிறுநீரகங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக, பாக்கெட்டுக்களில் அடைக்கப்பட்ட உணவுப் பண்டங்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். நேர விரயத்தை தவிர்ப்பதை தவிர, இந்த உணவுப் பண்டங்களால் வேறு பயன் இல்லை. மாறாக, உடலுக்கு தீங்கையே அவை விளைவிக்கின்றன என்று மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுகுறித்து, மும்பை மருத்துவ அறிவியல் மைய பேராசிரியர் டாக்டர் கிருபாளினி, மும்பை ஏசியன் இருதய மருத்துவமனையின் சிறுநீரகத்துறை மருத்துவர் உமேஷ்கண்ணா உள்ளிட்டோர் கூறியதாவது: பாக்கெட் செய்யப்படும் உணவு பண்டங்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்கும் கவர்ச்சியாக தெரிவதற்கும் அதில் செயற்கையான வண்ணக் கலவைகள், அதிகப்படியான உப்பு ரசாயன பவுடர்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன. அவைகள் மனித சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்தியாவில் சிறுநீரக நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் இரண்டு லட்சம் பேர் சிறுநீரகம் செயலிழப்பால் பாதிக்கப்படுகின்றனர். சிறுநீரக நோய்க்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மாறிவரும் உணவுப் பழக்கங்கள் முக்கிய காரணமாக உள்ளன. நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் தற்போது பாக்கெட்டுக்களில் அடைக்கப்பட்ட உணவுப் பண்டங்களை பயன்படுத்துகின்றனர். இந்த பண்டங்களில் எந்தவிதமான சத்துக்களும் இருப்பதில்லை.

மாறாக, உடலுக்கு தீங்கு இழைக்கக் கூடிய ரசாயனங்கள் தான் உள்ளன. மேலும், சிறுநீரகம் தொடர்பாக சிறுசிறு பாதிப்பு இருப்பவர்களுக்கும், இந்த உணவுப் பண்டங்கள் நோயை அதிகப்படுத்துகின்றன. சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் பாக்கெட் உணவுப் பொருட்களை அறவே தவிர்ப்பது நல்லது. பழங்கள், பழச்சாறுகள், காய்கறிகள் உள்ளிட்ட இயற்கை உணவு பொருட்களை எடுத்துக்கொள்வது நல்லது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி: தினமலர்