Showing posts with label எரிபொருள் செல் என்றால் என்ன எதிர்கால எரிபொருள் ஹைட்ரஜனே. Show all posts
Showing posts with label எரிபொருள் செல் என்றால் என்ன எதிர்கால எரிபொருள் ஹைட்ரஜனே. Show all posts

Thursday, October 14, 2010

எரிபொருள் செல்கள்

சக்தியைப் பெறுவதற்கான இயற்கை வளங்கள் வேகமாகக் குறைந்துகொண்டு வரும் இத்தருணத்தில் எரி பொருள் செல்களே எதிர்காலத் தொழில்நுட்பத்தை நிர்ணயிக்கக்கூடியவை என்கிறார்கள் ஆய்வாளர்கள். இது கடந்த நூறாண்டு காலமாகவே தெரிந்த செய்தி என்றாலும் தற்போது பொருட்களைப் பற்றிய விஞ்ஞானத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் வரும் ஆண்டுகளில் எரிபொருள் செல்களை அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பினை அதிகரித்திருக்கிறது.

எரிபொருள் செல் என்றால்....?

எரிபொருள் செல்கள், எரிபொருட்களின் வேதியியல் சக்தியை நேரடியாக மின்சக்தியாக மாற்றித்தரக் கூடியவை. இந்த செல்களில் ஹைட்ரஜன், மீத்தேன், மெத்தனால் போன்ற எரிபொருட்களைப் பயன்படுத்தலாம் என்றாலும் மிக அதிகமான பயன்பாட்டில் இருப்பவை ஹைட்ரஜன் செல்களே. இந்த செல்களில் ஹைட்ரஜன் மின்சாரம் ஊடுருவிச் செல்லும் ஒரு திரவத்தின் முன்னிலையில் ஆக்ஸிஜனுடன் சேரும்போது மின்சக்தி கிடைக்கிறது. தண்ணீரும் வெப்பமும் வெளியேற்றப்படுகின்றன. மின் உற்பத்தியில் கையடக்கமான கருவியாக, வாகனங்களுக்கு சக்தி தருபவையாக, மடிக்கணினி மற்றும் லாப்டாப் போன்ற மின்னணு சாதனங்களில் உள்ள லித்தியம் பாட்டரிகளுக்குப் பதிலாக அவற்றுக்கு மின்சக்தி தரும் செல்களாக எனப் பல்வேறு விதங்களில் அவை பயன்பட இருக்கின்றன.

சென்னையை நோக்கி வந்த இங்கிலாந்து ஆய்வாளர்கள்

கடந்த காலங்களில் வணிகரீதியாகப் பயன்படும் அளவில் எரிபொருள் செல் பற்றிய ஆராய்ச்சி நடைபெறவில்லை. ஆனால் காலம் மாறுகிறது. இங்கிலாந்திலிருந்து ஆய்வாளர்களும் தொழில்நுட்ப முனைவோரும் இந்திய ஆய்வாளர்களுடன் கூட்டாக ஆராய்ச்சியை மேற்கொள்ள அண்மையில் சென்னை வந்துள்ளனர். சென்னையில் எரி பொருள் செல் பற்றி அறிவியல் தொழில்நுட்பத்துறை, ஐ.ஐ.டி. போன்ற நிறுவனங்கள் ஆய்வுகளை நடத்தி வருவதால் அவர்கள் சென்னையைத் தேர்ந்தெடுத்துள்ளனர் (தகவல் : தி இந்து)

2010 ஜூன் மாதத்தில் நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையில் ஹைட்ரஜனால் இயக்கப்பட்ட ஒரு கார் 400 கி.மீ. தூரம் சென்றது ; ஒரு மோட்டார் பைக்கினால் 510 கி.மீ. வரை செல்ல முடிந்தது. எனவே, ஹோண்டா, டயோட்டா போன்ற பெரிய கார்/பைக் கம்பெனி கள் இத்துறையில் ஆராய்ச்சியை முடுக்கிவிட்டுள்ளன.

எரிபொருள் தொழில்நுட்பத்திற்கு மிகப் பெரிய சந்தை காத்திருக்கிறது. இந்தியாவில் கைபேசிகளை இயக்கும் டீசல் ஜெனரேட்டர்களுக்கு ஓர் ஆண்டில் 200 கோடி டாலர் அளவுக்கு சந்தை உள்ளது. டீசல் விலை கூடிக்கொண்டேயிருப்பதால் ஜெனரேட்டர் செலவும் கூடிக்கொண்டே வருகிறது. எனவே, வணிக ரீதியாக டீசலுக்கு மாற்றான எரிபொருளாக ஹைட்ரஜன் போன்ற எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அத்துடன், பூமி சூடேறுவதைத் தடுக்கவும் ஹைட்ரஜன் செல்கள் பயன்படும் என்பதால் ]]]]]சுறறுச்சூழலுக்கு அவை இயைந்தவையாக இருக்கப்போகின்றன.

எதிர்கால எரிபொருள் ஹைட்ரஜனே

எரிபொருள் தொழில்நுட்பம் பற்றிய ஆய்வு அறிக்கைகளை வெளியிடுவதில் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்குச் சமமாக இந்தியா வளர்ந்திருக்கிறது என்பதில் நாம் மகிழ்ச்சியடையலாம். எதிர்காலத்திற்கான எரி பொருள் ஹைட்ரஜன்தான் என்பது தெளிவாகிவிட்டாலும், ஹைட்ரஜனால் இயக்கப்படும் ஒரு காரின் தற்போதைய விலை பெட்ரோலினால் இயங்கும் காரைவிட பத்து மடங்கு அதிகமாக உள்ளது. இந்த செலவைக் கணிசமாகக் குறைத்து மக்கள் பயன்படுத்தும் வகையில் இத்தொழில் நுட்பத்தைக் கொணரும் சவால் மிக்க பணி ஆய்வாளர்கள் முன் காத்திருக்கிறது. இந்த லட்சியத்துடன் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.