Wednesday, July 13, 2011

வேதியியல் இன்றி நவீன வாழ்க்கை இல்லை!

2011ஆம் ஆண்டை சர்வதேச வேதியியல் ஆண்டு என ஐ.நா. அறிவித் திருக்கிறது.

வேதியியல் நம் அன்றாட வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. காலையில் எழுந்ததிலிருந்து இரவு உறங்கச் செல்லும் வரை வேதியியல் தந்த பொருட்களின் துணையோடுதான் நாம் வாழ்கிறோம். நாம் பல்துலக்கப் பயன்படுத்தும் பற்பசை, குளிக்க உபயோகிக்கும் சோப், பிளாஸ்டிக் வாளி, தண்ணீர் எடுக்கப் பயன்படுத்தும் கோப்பை, தலைமுடியை வாரப் பயன்படுத்தும் சீப்பு, சாப்பிடும் தட்டு, சமையலுக்குப் பயன்படுத்தும் சமையல் எரிவாயு, சமையலில் இடம் பெறும் உப்பிலிருந்து வேறு பல பொருட்கள், எழுத உபயோகிக்கும் இங்க், நம்முடைய உடைகளை அழகழகான வண்ணங்களில் மிளிரச்செய்யும் சாயங்கள், படுக்கப் பயன்படுத்தும் நுரை மெத்தைகள், நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த கட்டுரையை அச்சடிக்கப் பயன்பட்ட இங்க் ... என நாம் அன்றாடம் பயன்படுத்தும் எண்ணற்ற பொருட்கள் எல்லாம் வேதியியல் தந்த பொருட்களே.

அதுமட்டுமா? வேதியியல் இன்றி மருந்து மாத்திரைகள் கிடையாது. பாலியஸ்டர் இழைகள், நைலான் காலுறைகள், எவர்சில்வர் பாத்திரங்கள், குளிர்பானங்கள், தீபாவளி-திருவிழாக்களை ஜொலிக்கச் செய்யும் பட்டாசுகள், கணினிகள், சிடிக்கள், டிவிடிக்கள், ஐ-பாட்கள், வாகன எரிபொருட்கள், சமையல் எண்ணெய் வகைகள், குளிர்பதனப் பெட்டிகள், ரேடியோ, தொலைக்காட்சிப் பெட்டிகள், பாட்டரிகள்.. என அங்கிங்கின்றி எங்கும் நிறைந்திருக்கும் பொருட்கள் எல்லாம் வேதியியல் தந்த பொருட்களே.

சுருக்கமாகச் சொல்வதானால், வேதியியல் என்பது நம்மைச் சுற்றியுள்ள எல்லாப் பொருட்களின் - காற்று, நீர், உலோகங்கள், நெகிழிகள், மருந்துகள் போன்ற எல்லாவற்றின் - தன்மைகளையும் அவை எப்படி மற்ற பொருட்களுடன் சேர்ந்து வேறு பொருட்களாக மாறு கின்றன என்பதையும் பற்றியது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே வேதியியல் தோன்றிவிட்டாலும், அது அறிவியலாகத் தொடங்கவில்லை. ஆரம்பகால வேதியியலாளர்கள் மற்ற உலோகங்களை விலைமதிப்பற்ற தங்கமாக மாற்ற வேண்டும் என்ற ரசவாத முயற்சியிலேயே ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் ஆவியாக்கி குளிரச் செய்தல், வடிகட்டுதல் போன்ற நவீன விஞ்ஞானிகள் பயன்படுத்தும் சில வேதியியல் பரிசோதனை முறைகளை அவர்கள்தான் அறிமுகப்படுத்தினார்கள்.

மருத்துவம், வேளாண்மை, உயிரியல், பொறியியல், புவியியல், பொருள் உற்பத்தி போன்ற மற்ற அறிவியல் துறைகளை இணைக்கும் பாலமாக வேதியியல் விளங்குகிறது. மனித முயற்சியின் காரணமாக வளர்ந்துள்ள கலை, பண்பாட்டுத் துறைகளில் முக்கியப் பங்கு வகிக்கும் வண்ணக் கலவைகள், சாயங்கள், துணி வகைகள், கட்டடங்கள் ஆகிய எல்லாமே வேதியியல் தந்த கொடைகளே. இதன் காரணமாக, வேதியியல் `அறிவியலின் மகுடம் எனக் கருதப்படுகிறது. வேதியியலின் அடிப்படைக் கோட்பாடுகளைப் புரிந்து கொண்ட மாணவர், பின்னர் தான் விரும்பும் வேறு அறிவியல் துறைக்கு எளிதில் மாறிக் கொள்ள முடியும்.

இன்று நமக்குத் தெரியவந்துள்ள 118 தனிமங்கள்தான் பொருட்களின் அடிப்படைக் கூறுகள். இவற்றின் விதவிதமான சேர்க்கைகளே விதவிதமான பொருட்களை உருவாக்குகின்றன. வேதியியல் வளர்ச்சியில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் டால்டன். 1803ஆம் ஆண்டில் அவர் அறிவியல்பூர்வமான அணுக் கோட்பாட்டை வெளியிட்டார். பொருட்கள் எப்படி அணுக்களால் ஆனவை என்பதை அவர் உதாரணங்களுடன் விளக்கினார். ரஷ்ய விஞ்ஞானி டிமித்ரி மாண்டலீவ் 1869-ல் தனிமங்களை ஒரு அட்டவணையில் வரிசைப்படுத்தியபோது 63 தனிமங்களே இருந்தன. பின்னால் கண்டுபிடிக்கப்பட இருக்கிற தனிமங்களுக்காக அவர் அட்டவணையில் காலியிடங்களை விட்டது அவரின் மேதமை. இன்று வர்த்தகம், தொழில், சுற்றுச் சூழல் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிவியல் மாணவர்கள் தங்கள் துறைகளைப் புரிந்து கொள்ள வேதியியலின் அடிப்படைகளை அறிந்து கொள்வது தவிர்க்க முடியாதது.

நன்றி -பேராசிரியர் கே. ராஜு

No comments: