Sunday, February 13, 2011

மொழிகளின் மரணம்

26ஜனவரி, 2010 ... இந்தியாவின் அறுபதாவது குடியரசுதினம். முக்கியத்துவம் வாய்ந்த தினம். ஆனால், அன்றுதான் அந்தமான் நிக்கோபார் தீவில் பேசப்பட்டு வந்த 65 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த “போ” என்ற மொழி மரணமடைந்தது. ‘சிறப்பு அந்தமான்’ மொழிகளில் ஒன்றான “போ” மொழியை பேசிவந்த போவா சீனியர் என்ற 80 வயது மூதாட்டி மரணமடைந்த போது அந்த மொழியும் மரணமடைந்தது. 2004ம் ஆண்டு டிசம்பர் சுனாமி அந்தமான்நிக்கோபார் தீவுகளை கோரமாக தாக்கிய போது அதில் உயிர் தப்பிய சிலரில் போசீ னியரும் ஒருவர். சுனாமி தாக்கிய போது, ராட்சத அலைகள் எழும்பி தணிந்ததையும், அதன் தாக்கத்தையும் “போ” மொழியில் அவர் பாடி, வீடியோவில் பதிவு செய்யப்பட்டது தான் “போ” மொழி வாழ்ந்ததற்கு சாட்சியாக உள்ளது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆய்வாளர் அன்விதா அபி, “உலகின் மிகப்பழமையான மொழி அழிந்துவிட்டது” என இதுபற்றி குறிப்பிட்டுள்ளார்.

2010 ம் ஆண்டு ஆகஸ்டு 20ம் தேதி கொச்சியைச் சேர்ந்த வில்லியம் ரொசாரியோ மரணமடைந்தார். அவரது மரணத்துடன் 15ம் நூற்றாண்டிலிருந்து கேரளாவின் கொச்சி பகுதியில் பேசப்பட்டு வந்த “மலை யாள - போர்ச்சுகீஸ் க்ரியோல்” என்ற மொழி மரண மடைந்துவிட்டது. 400 ஆண்டுகளுக்கும் மேலாக, கொச்சியிலுள்ள கத்தோலிக்கர்களின் அடையாளமாக அம்மொழி திகழ்ந்தது.

“ரெமோ” என்ற மொழி ஒரிசா மாநிலத்திலுள்ள ‘போண்டா’ என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களால் பேசப்படுகிறது. தற்போது இம்மொழியை பேசுவோர் 5000 பேர் மட்டுமே. இந்த இனமக்கள் தற் போது ‘ஓரியா’ மொழியை பேசத் துவங்கி விட்ட நிலையில் வெகு விரைவில் இந்த மொழி (ரெமோ) மறைந்துவிடுமென கணிக்கப்பட்டுள்ளது.

2009ல் யுனெஸ்கோ நிறுவனம் “அழிந்துவிடும் நிலையில் உள்ள மொழிகளின் வரைபடத்தை” வெளியிட்டது. அதில், அழியும் அபாயம் உள்ள மொழிகள், அழிந்து விட்ட மொழிகள் என உலகின் மொழிகளை வகைப்படுத்தியுள்ளது. 2,473 மொழிகள் இதில் அழியும் அபாயத்தில் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 1950க்குப் பின்னர் 5 மொழிகள் அழிந்துவிட்டன. 42 மொழிகள் கிட்டத் தட்ட அழியும் நிலையில் உள்ளன. 63 மொழிகள் நிச்ச யம் அழிந்துவிடும் என்ற பட்டியலிலும், 82 மொழிகள் அழியும் அபாயம் உள்ளவை என்ற பட்டியலிலும் உள்ளன.

பழங்குடி இன மக்கள் பேசுகின்ற பல மொழிகள் ‘தாய்மொழி’ என்று கருதப்பட்டு அதிகாரபூர்வமாக “மொழி” என்ற வரையறைக்குள் வருவதில்லை. இது தவிர நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் அன்றாட வாழ்க்கைத் தேவைகளையொட்டியும் பொருளாதார நிர்ப்பந்தங்களினாலும், அந்தந்த மாநிலத்தில் அரசு மொழியாகக் கருதப்படும் மொழியை கற்று பேசவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வேலை நிமித்தம், குடிபெயர்வு அதிகரித்துள்ள சூழலில், குறைவான எண்ணிக்கையில் உள்ள மக்கள் பேசுகின்ற மொழிகள் சிறிது, சிறிதாக மறைந்து விடுகின்றன.

மைசூரிலுள்ள இந்திய மொழிகள் கழகம் (சிஐ ஐஎல்) மொழிகள் அழியும் அபாயத்தைக் கருதி, பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. யுனெஸ்கோ நிறுவனம் தயாரித்த வரைபடத்திற்கு உதவிய இந்த அமைப்பின் இயக்குனர் உதயநாராயணசிங், “உலக நாடுகளின் நிலையோடு ஒப்பிடுகையில், தாய் மொழி அழியும் அபாயம் இந்தியாவில் அதிகமாகவே உள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில், மொழிகளைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். யுனெஸ்கோ வரைபடம் வெளியிடப்பட்ட உடனேயே மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பழங்குடி மக்கள் பேசும் மொழிகள் மற்றும் மிகவும் பழமையான மறைந்து வரும் மொழிகள் பற்றிய ஆய்வை மேற்கொள்ள கமிட்டி அமைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

சி.ஐ.ஐ.எல் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜேஷ் சச்தேவா “சமூகரீதியில் ஓரங்கட்டப்படுகின்ற மக்களுக்கு அவர்களுடைய கலாச்சாரம், கவுரவம் ஆகியவற்றை பாதுகாக்கும் ஆயுதமாக மொழி பார்க்கப்படுகிறது” என்கிறார்.

மொழிகளை பாதுகாப்பதன் மூலமே அந்தந்தப் பகுதியில் தோன்றி, வளர்ந்துள்ள பழக்க வழக்கங்களையும், அறிவியலையும் பாதுகாக்க முடியும். எடுத்துக்காட்டாக, அந்தமானில் மறைந்த போவா சீனியருக்கு அப்பகுதியிலுள்ள செடி, கொடிகள், இலைகள், பழங்கள் என அனைத்தின் மருத்துவ பயன்பாடுகள் பற்றி நன்கு தெரியும். மொழி ஆய்வாளர் அபியும் அவரது குழுவினரும் போவா சீனியருடன் பேசி, அந்த விஷயங்களை எல்லாம் சேகரித்து, ஆவணப்படுத்தும் முயற்சியை மேற் கொண்டுள்ளனர். அந்தமானில் பின்பற்றப்பட்டு வந்த பிரத்யேக பழக்கங்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டன என்பதற் கான வரலற்று சான்றுகள் நிறையவே உள்ளன. இன்று அந்தமானிலும் ‘இந்தி’ பிரதான மொழியாக மாறி விட்டது. இந்தி கற்பது பொருளாதார ரீதியில் முன்னேற உதவி செய்தவாக அம்மக்கள் கருதுகின்றனர். எனவே முன்பு பேசப்பட்டு வந்த மொழிகள் மறைந்து வருகின்றன.

1894 - 1928 வரை இந்தியாவில் பேசப்பட்ட மொழிகள் குறித்து ஜி.ஏ. க்ரியர்சன் என்பவர் ஆய்வு மேற்கொண்டு விபரங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார். இந்திய அரசியல் சாசனத்தின் எட்டாவது பட்டியலில் உள்ள மொழிகளுடன் 22 மொழிகள் சேர்க்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அரசு என்ன சொல்கிறது? குறிப்பிட்ட ஒரு மொழியை குறைந்தது 10000 பேர் பேசினால்தான், அது ‘மொழி’ என்கின்ற வரையறைக்குட் பட்டதாக கருதப்படும். 2001 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, பட்டியலிடப்படாத 100 மொழிகள் 3 விழுக்காடு இந்திய மக்களால் பேசப்படுகின்றன. (அதாவது 3 கோடி பேரைவிட அதிகம்) “இந்த மொழிகள் பாதுகாக்கப்படாவிட்டால், அமெரிக்க ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மொழிகளுக்கு சென்ற நூற்றாண்டில் ஏற்பட்ட கதிதான் ஏற்படும்” என மொழியியல் வல்லுநர் கிரிகெரி ஆண்டர்சன் கூறி யுள்ளதை யுனெஸ்கோவும் வலியுறுத்தியுள்ளது.

குஜராத்தில் அழியும் நிலையிலிருந்த ‘பிலி’ என்ற மொழியின் பாதுகாப்பு பணியை மேற் கொண்டுள்ள காஞ்சிபடேல் “ஒரு மொழி பாதுகாக்கப்பட மூன்று விஷயங்கள் முக்கியமானவை 1. அந்த மொழியை பயிற்றுவிப்பது, 2, அந்த மொழியில் இலக் கியங்களை வெளியிடுவது, 3 இதர மொழிகளை பேசு வோரிடையே குறிப்பிட்ட மொழி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம்” என்கிறார். மொழி ஆய்வாளர் அபி, “ஒன்று - முதல் மூன்று வகுப்புகள் வரை அனைத்து குழந்தைகளுக்கும் தாய் மொழி மூலம் கல்வி அளித்து, அத்துடன் அந்த மாநில மொழியைக் கற்பிக்க வேண்டும். 4ம் வகுப்பிலிருந்து ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளை அறிமுகப் படுத்தலாம்” என்ற ஆலோசனையை முன்வைக்கிறார்.

மொழியை அரசியல் ஆதாயங்களுக்கென பயன்படுத்தப்பட்டுள்ளதற்கான வரலாற்று சான்றுகள் நிறைய உள்ளன. சமீபகாலமாக பழங்குடி மக்கள் பேசுகின்ற மொழிகள் புறக்கணிக்கப்படுகின்றன என்று மாவோயிஸ்டுகள் குரலெழுப்பி வருகின்றனர். இதன் மூலம் பழங்குடி மக்களை தங்கள் வசம் வென்றெடுக்க கருதுகின்றனர். மத்திய இந்தியாவில், மாவோயிஸ்டுகள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பட்டியலிடப்படாத, ஆனால் 20 லட்சம் மக்கள் பேசும் ‘கோந்தி’ மொழி மூலம் கல்வி அளிக்கப்படுகிறது. சத்தீஸ்கர் மாநிலத் தில்தான் கோந்தி மொழி பேசுவோர் அதிகமாக உள்ளனர். இருப்பினும்,ஒரு பள்ளிபாட நூல் கூட இது வரை அந்த அரசால் வெளியிடப்படவில்லை. மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகரித்தபின், தற்போது, அம்மாநில அரசு கோந்தி, கொர்க்கு, சத்தீஸ்கரி, ஹல்பி, சர்குஜிய ஆகிய மொழிகளில், 3,4, 5ம் வகுப்புகளுக்கான பாடநூல்களை வெளியிட்டுள்ளது. இது பழங்குடி இன மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பட்டியலில்வராத மொழிகளை பாதுகாக்க ‘பாஷா’ என்ற அமைப்பை ஏற்படுத்தி கணேஷ் டெவ்வி என்பவர் மொழி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகிறார் ‘புதன்’ என்ற கலைக்குழு அமைக்கப்பட்டு பாடல், நாடகங்கள் மூலம் மொழிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை ‘பாஷா’ அமைப்பு மேற்கொண்டுள்ளது. ‘ஹிம்லோக்’ என்ற அமைப்பு இமாலயப் பகுதிகளில் பேசப்படும் பட்டியலிடப்படாத மொழிகளை காக்க, நூல்கள், வார, மாத இதழ்களை வெளியிட்டு வருகிறது.
ஜார்கண்ட் மாநிலத்திலும் ‘மண்டரி’, ‘ஹோ’, ‘அசுர்’, ‘க்ரியா’ ‘குருக்ஸ்’ போன்ற அழிந்து வரும் மொழிகளை பாதுகாக்க ‘ஜார்கண்டி பாஷா சாகித்ய சன்ஸ்க்ருதி அக்ரா’ என்ற அமைப்பு அம்மாநில எழுத்தாளர்களால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இது வரை இந்த அமைப்பு சார்பில் 25 நூல்கள் பழங்குடி மக்கள் பேசும் மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.

‘ஜோகர் திசும் கபர்’ என்ற மாத இதழ் மூலமாகவும், மொழி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. 13ம் நூற்றாண்டின் போது வட கிழக்கு சீனாவிலிருந்து அசாம் வந்த ‘அஹாம்’ இன மக்கள் அசாமிய மொழியை பேச ஆரம்பித்து, இன்று ‘அஹாம்’ மொழி அழியும் தருவாயில் உள்ளது. எனவே திப்ருகர் பல்கலைக்கழகத்தில் இம்மொழி கற்பிக்கப்படுகிறது. இதேபோல் ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தைச் சேர்ந்த ஆங்கில பேராசிரியர் பிரசன்னஸ்ரீ ‘குர்ரு’ இன மக்களின் வரலாற்றை ஆராய்ந்து, அவர்கள் மொழிக்கு எழுத்து வடிவங்களை கண்டுபிடித்து, உயிர் கொடுத்துள்ளார். ஆந்திரா, ஒரிசா மாநிலங்களில் கொண்டா - டொராமொழி பரவலாக பேசப்பட்டாலும், பழங்குடி மக்கள் ‘ஓரியா’ மொழியை பேச ஆரம்பித்துவிட்டனர். எனவே இந்த மொழியை காப்பாற்றவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ‘சந்தால்’ இனமக்கள் பெங்காலி பேச ஆரம்பித்து விட்டனர். தற்போது, ‘ஒல்சிக்கி’ என்ற அவர்கள் மொழியில் பேச ஊக்கு விக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் மொழிகள் அழிந்து வருவதை கவ னித்து, “லிவிங் டங்க்ஸ்” (அமெரிக்க அமைப்பு) “சர் வைவல் இன்டர் நேஷனல்” (பிரிட்டிஷ் அமைப்பு) “சொரோ சொரோ” (பிரெஞ்சு அமைப்பு) ஆகியவை ஆய்வு செய்து மொழி பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்தியக் குடியரசு இந்தியாவில் பேசப்படும் மொழிகளை பிரதிபலிக்க வேண்டும். இந்தியாவில் பேசப்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. ஒருதுருவ உலகம், உலகமயம் ஆகிய கொள்கைகள் இந்நாட்டின் பன்முகத்தன்மையை அழித்துவிடாமல் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். மொழிகள் நம் சிந்தனைகளை கருத்துக்களை மட்டும் வெளிப்படுத்துவதில்லை. அதற்கும் மேலாக ஒவ்வொரு தளத்திலும், நமது பன் முகத்தன்மையை வெளிப்படுத்துகின்றன என்பதால், மொழிகளை பாதுகாப்போம்!
நன்றி: தீக்கதிர்

No comments: